பின்னலாடை மற்றும் டெக்ஸ்டைல் தொழில்துறையினரின் முக்கிய கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு இருக்கும் என்று நம்பியிருந்த நிலையில், இன்றைய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
திருப்பூர்: இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த நூல் விலை உயர்வு, பருத்தி பஞ்சு விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது, என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்துள்ளார்.
பின்னலாடை நகரமான திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 48 ஆயிரம் கோடி, அந்நிய செலவாணி ஈட்டித்தரும் அளவிற்கு பின்னலாடை துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மூலப்பொருட்களின் உயர்வால், பெரும் சரிவை சந்தித்து வரும் பின்னலாடை தொழில் துறையினர், அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அவற்றில், முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காதது, திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னலாடைத் துறையினரின் மிகுந்த எதிர்பார்ப்பான, உள்ளாடை துறையினருக்கு தனி வாரியம், பின்னலாடை தொழிலாளர்களுக்கு ஹவுஸிங் யூனிட் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வழக்கம் போலவே இந்த பட்ஜெட்டிலும் பின்னலாடைக்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தனர்.
"மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை. நூல் விலை உயர்வு, பருத்தி பஞ்சு விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பஞ்சு இறக்குமதி வரி விலக்கு குறித்த அறிவிப்பும் இல்லை. டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்களுக்கு என்று தனி அறிவிப்புகள் எதுவும் இல்லை.
ஏற்றுமதி ஆடைகளுக்கான ஜிப், லேபிள், ஸ்டிக்கர், டேக் அட்டை போன்ற உப மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு வரி செலுத்துவதில் விதிவிலக்கு மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி பிணையம் இல்லா கடன் வழங்கும் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது", என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்துள்ளார்.