அன்னூரை அடுத்துள்ள அல்லப்பாளையம் பகுதியில் கிணற்றில் இறங்கி மாட்டினை கயிறு கட்டி சுமார் 2 மணி நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
கோவை: கோவை அன்னூரை அருகே 25 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டினை சுமார் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள அல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராமகிருஷ்ணன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலமும், மாடுகளும் உள்ளன.
இந்நிலையில், இன்று அதிகாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடு ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பின்னர், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 10 அடி நீரில் மிதந்த வண்ணம் நீரில் தத்தளித்துள்ளது.
பின்னர், இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் ராமகிருஷ்ணனுக்கு தெரிய வரவே அன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி மாட்டினை கயிறு கட்டி சுமார் 2 மணி நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
சுமார் 25 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டினை 2 மணி நேரமாக போராடி பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.