கோவை மாநகராட்சியில் மொத்தம் 1290 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் 169 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கோவிட் தடுப்பு முறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு தேர்தல் அலுவலரும் கோவை மாநகராட்சி ஆணையாளருமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இன்று முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலானது நடைபெறும், வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் பிப்ரவரி 4, வேட்பு மனுவை பரிசீலனை செய்யும் நாள் பிப்ரவரி 5, வேட்பு மனுவை திரும்பப் பெரும் நாள் பிப்ரவரி 7, தேர்தல் நாள் பிப்ரவரி 19, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல் கூட்டம் மார்ச் 2, மேயருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெறும்.
தமிழக அரசு ஜனவரி 26ம் தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, கோவை முழுக்க உள்ள பத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
அதேபோல, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியின் சுவரோட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டது. மாநகராட்சியில் 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிகளை துவங்கி உள்ளனர். அனைத்து உதவி தேர்தல் அலுவலகத்திலும் நீதிமன்ற உத்தரவின் படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 1290 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் 169 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஜி.சி.டி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலுக்காக 1,192 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட உள்ளனர். 105 மண்டல அதிகாரிகள் வாக்குப்பதிவு குறித்து கட்சி முகவர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளனர்.
மேலும், கோவை மாநகராட்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை உடனடியாக அறிவிக்கலாம். அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கொரோனா தேர்தல் வழிமுறை தெரிவிக்கப்பட்டது. வரும் 31ம் தேதி தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். தேர்தல் செலவீனம், வைப்பு தொகை குறித்து அரசியல் கட்சியனருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக மாநகராட்சியில் ஒரு வேட்பாளர் ரூ.85 ஆயிரம் செலவு செய்யலாம். 2018ம் ஆண்டு தேர்தல் விதிப்படியே இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், மாற்று ஊழியர்கள் பணிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 0422-2300132 என்ற எண்ணுக்கு அழைத்து தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் அளிக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.