இது குறித்த புகாரின் பேரில் பேரூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் நகை, டிவி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பேரூர் அடுத்த மாதம்பட்டி குப்பனூர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (31). இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அலுவலக வேலை காரணமாக ஹரிபிரசாத் சென்னைக்கு சென்றுவிட்டார். ஹரிபிரசாத் பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக அவரது பெற்றோர் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று காலை ஹரிபிரசாத் வீட்டின் அருகில் வசிக்கும் தங்கவேல் என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினார்.
இதை அடுத்து, ஹரிபிரசாத் சென்னையில் இருந்து கோவைக்கு விரைந்து வந்தார். வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்க நகைகள் மற்றும் ஹாலில் மாட்டி வைக்கப்பட்டிருந்த எல்இடி டிவி ஒன்றையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரிபிரசாத் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல, சிங்காநல்லூரில் இன்ஜினியர் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடிய சுடலை கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 29 தங்க நகை திருட்டு என முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் தாரர் மனைவி கணவருக்கு தெரியாமல் 9 பவுன் தங்க நகையை எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. குற்றவாளி சிக்கிய பின்னரே உண்மை தெரியவந்தது.
இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 53 வயது நபர் 3 பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் திருடு போனதாக புகார் அளித்திருந்தார். போலீஸ் விசாரணையில் இது பொய் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.