கோவையில் 100 வார்டுகள் உள்ள நிலையில் 10 வார்டுகள் மட்டுமே பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு 19 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் 10 வார்டுகள் மட்டுமே பட்டியலின மக்களுக்கும், பட்டியல் இன பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
19 சதவிதம் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவத்தில்லை எனவும், மக்களின் அரசியல் உரிமையும், வாழ்வுரிமையும் பறிப்பதாக இத்தகைய செயல் உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது மக்களுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய அரசியல் அநீதியாகும். மேலும், அம்மக்கள் உரிமைகள் பெறுவதிலும், வசதிகள் பெறுவதிலும், நலத்திட்டங்கள் பெறுவதிலும், பல்வேறு இடைவெளிகளை ஏற்படுத்துகிறது.

இத்தகைய நிலைமை மாற்றிடுவதற்கு, நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில், 19 சதவிதம் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, சமூகநீதிகட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

மேலும், உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்துகட்சிகளின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.