மகளுக்கு சீர் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கை கொடுக்க வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (46). இவரது மனைவி சுமதி (42). இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், மகளுக்கு வரும் 27ம் தேதி சீர் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான பத்திரிக்கைகள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து வந்தார்.
இதனையடுத்து, இன்று காலை மசக்காளிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது உறவினர் இல்லத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வந்துள்ளார். பத்திரிக்கை கொடுத்து விட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவரது இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற லாரி ஒன்றினை பேருந்து முந்தியுள்ளது. பேருந்திற்காக இடது புறமாக லாரி டிரைவர் திருப்பியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஓரமாக சென்று கொண்டிருந்த துரைப்பாண்டியனின் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியுள்ளது.
இதில் நிலைதடுமாறிய துரைப்பாண்டியன் இருசக்கர வாகனத்தைத் திருப்ப முயன்ற போது லாரியின் இடதுபுறமாக துரைப்பாண்டியன் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
சுமதி எதிர்பாராத விதமாக வலது புறமாக விழுந்ததில் அவரின் உடல் லாரியின் சக்கரங்களுக்கிடையே மாட்டி இரு துண்டுகளானது.
மேலும், உடல் முழுவதும் சிதைந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சுமதி பரிதாபமாக பலியானார். லாரியின் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மகளுக்கு சீர் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கை வைக்க வந்த இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் தாய் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.