கோவை ஆர்.எஸ்.புரம் மண்டலம் பாஜக சார்பில் நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் 208 பெண்கள் பொங்கல் வைத்தனர். பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவை, பாஜக மாநில தலைவர், அண்ணாமலை துவக்கி வைத்தார்.
கோவை: கோவை, காந்திபார்க் பொன்னையராஜபுரம் பகுதியில் பாஜக சார்பில் "நமோ பொங்கல்" விழாவை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவை, பாஜக மாநில தலைவர், அண்ணாமலை துவக்கி வைத்தார்.
விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர்.
பின்னர், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர், அண்ணாமலை, "இன்றைய தினம் ஆர்.எஸ்.புரம் மண்டலத்தில் 208 பெண்கள் பொங்கல் வைத்துள்ளனர். இதில், இளம் பெண்கள் பலர் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழகத்தை காட்டிலும் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநில அரசுகள், பல்வேறு கொரோனா கட்டுபாடுகளை விதித்த போதிலும், ஆலயங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் முக்கிய திருவிழாவான தைப்பூச தினமன்று, தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டிருந்தது."
மக்களின் மீது நம்பிக்கை இல்லாமல், இந்த அரசு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே, கட்டுபாடுகளுடன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலை திறக்க வேண்டும். அரசு வழங்கிய பொங்கல் பரிசில் சில இடங்களில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தும், அந்த பொருட்கள் தெரிந்தே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் எப்போது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்? எனக் கேள்வி எழுப்பிய அவர் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது கேளி கூத்தாகிவிடுமென தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நேரடியாக மத்திய அரசு எடுத்து கொள்ளும் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் வழக்கமாக மாநில அரசு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய அரசிற்கு செல்ல அனுமதி வழங்காததால், மத்திய அரசு தாமாகவே இதனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இதனை அரசு அலுவலர்கள் அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாணவி தற்கொலையில் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென வானதி சீனிவாசன் கேட்டு கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த மாணவியின் தற்கொலை தூண்டப்பட்ட தற்கொலை என தெரிகிறது. இதற்கு, காரணமானவர்களை கைது செய்யாமல், அந்த மாவட்ட எஸ்.பி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இப்படி இருந்தால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என கேள்வி எழுப்பினார். எனவே, காவல்துறை அந்த மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ எடுத்தவரை விட்டு விட்டு, அதில் உள்ள உண்மையை ஆராய வேண்டுமென என்று அண்ணாமலை கேட்டுகொண்டார்.