மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று புதிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை விளாங்குறிச்சி, மகேஷ்வரி நகர், விநாயகபுரம், சின்ன மேட்டுப்பாளையம் பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே, 28 லட்சத்து, 35 ஆயிரம் மதிப்பீட்டில் 6.06 கிலோ மீட்டர் சாலை புதுப்பித்தல் பணிகளையும், குட்டை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று புதிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
மேலும் ரோட்டரி கிளப் சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் கான்சண்டேட்டர் இயந்திரத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 படுகைகள் ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை கொண்டதாக உள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை முன்னாள் அமைச்சர்கள் காட்டினார். ஆனால் தற்போது 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி வந்தது? கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஆலோசனை செய்கிறார். அதன்படி முடிவு வெளியாகும் என்று கூறினார்.