பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்க கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மாணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை ஆலந்துறையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் பள்ளியில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பிரிவினர் கடந்த சனிக்கிழமை மோதிக்கொண்டனர். அப்போது அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் இரண்டு பேர் கத்தியால் குத்தியதில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு குறித்து முறையான தகவல் அளிக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நந்தகுமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்க கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து மாணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.