சோதனையின் போது பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் யாரையும் அடிக்கக் கூடாது என போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இரவு, ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகளில் 41 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
கோவையிலும் தினசரி கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் பொது இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் என்ற விதிமீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, கோவை- அவினாசி ரோடு, திருச்சி ரோடு, காந்தி புரம், சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட 41 சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை சாலைகளில் அத்தியாவசிய வாகனங்கள் தவிர வேறு வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க உள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். 4 சக்கர வாகனங்கள் 23 மற்றும் 44 மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர். நகரில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
கொரோனா விதிமீறலில் ஈடுபட்டதாக கடந்த 2 நாட்களில் 1592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 2045 பேருக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல, சோதனையின் போது பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் அடிக்கக் கூடாது என்று போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடரும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.