உதகையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக காந்தள் என்னும் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது, கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி: உதகையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக காந்தள் என்னும் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது, கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் உதகை அருகே உள்ள காந்தல் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற தீயணைப்பு துறையினர் மழை நீர் புகுந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை காந்தல் பகுதியில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி ஆகியோர் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழையால் காந்தல் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேக்கமடைந்த குப்பை கழிவுகள் மற்றும் சேரும் சகதிகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கன மழையின் தாக்கம் நீடித்தால் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.