வழக்கு விசாரணை முடிவு பெற்று, குற்றவாளி தினேஷ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை: கோவை அருகே மனநலம் குன்றிய பெண்ணை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழுக்குப்பாறையை சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மனைவியின் தங்கையான அமிர்தம் (58) மனவளர்ச்சி குன்றியவர். இதனால் பழனிச்சாமி அவரை தனது வீட்டில் வைத்து கவனித்து வருகிறார்.
பழனிச்சாமியின் இளைய சகோதரரின் மகன் தினேஷ்குமார் (25)என்பவர் தென்னையை சேகரித்து விவசாயம் செய்யும் நோக்கத்தோடு அமிர்தத்திடம்(58) சென்று அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
கடந்த 03.06.2016 அன்று தினேஷ்குமார் தோட்டத்தில் தேங்காயை எடுக்கச் செல்லும்போது அமிர்தம் தினேஷ்குமாரை தடுத்துள்ளார்.
இந்நிலையில், தினேஷ்குமார் அமிர்தத்தை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இது சம்மந்தமாக பழனிச்சாமி மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் மதுக்கரை காவல் ஆய்வாளர் சிவகுமார் அவர்கள் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வழக்கு விசாரணை முடிவு பெற்று, தினேஷ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சிறந்த முறையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றத்தில் சாட்சிகளை சிறந்தமுறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.