எந்த விதமான புள்ளி விவரங்களும் இல்லாமல் வன்னியர்களுக்கு 10.5-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், சுமார் 60-ஆயிரம் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவு வெளியாகியுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: எந்த விதமான புள்ளி விவரங்களும் இல்லாமல் வன்னியர்களுக்கு 10.5-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், சுமார் 60-ஆயிரம் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவு வெளியாகியுள்ளதாகவும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வன்னியருக்கு 10.5- சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இன்று நீதிமன்றம் பேராணை வழங்கியிருக்கின்றது என தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்குக் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தலைவராக இருக்கின்றனர் என கூறிய அவர், கடந்த அதிமுக அரசு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தேர்தலுக்காக, அரசியலுக்காக வன்னியருக்கு 10.5-சதவீத இட ஒதுக்கீட்டை 1985-அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில் வழங்கியது என தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் ஒரு அரசுப்பணி கூட பெறாத 28-சமூகங்கள் இன்னமும் இருக்கின்ற நிலையில், கடந்த அரசு கொண்டு வந்த இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்தார். எந்த புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5-சதவீதம் கொடுத்து அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் நியமற்றது என தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் அதிமுக அரசு பிழைகள் செய்து இருக்கின்றது என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பேராணை வழங்கி இருக்கின்றது என தெரிவித்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவோம் எனவும் தெரிவித்தார். விரைவில் தமிழகத்தில் 60-ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது என்றும் அந்த வேலை வாய்ப்பு பறிபோகாமல் இந்த தீர்ப்பு தடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இந்த முறை சரியாக கவனிக்காமல் விட்டால் அடுத்த 30-ஆண்டுகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனவும் தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முயன்றும் சந்திக்க முடியவில்லை எனவும், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினரை இது வரை சந்திக்காதது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.