கரும்புக்கடை பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் வேண்டி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: கரும்புக்கடை பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் வேண்டி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோயம்புத்தூர் மாநகரின் கரும்புக்கடை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் மூன்று தனியார்ப் பள்ளிகளும் ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பல தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள் இங்குச் செயல்பட்டு வருகின்றது. ஆனால், இப்பகுதியில் கீழ்க்காணும் அடிப்படை மற்றும் மேம்பாட்டு வசதிகள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்குத் தேவை என தெரியப்படுத்தியும் இன்றளவும் எந்த வசதிகளையும் இப்பகுதியில் முழுமைப்படுத்தப்படவில்லை.
1. இப்பகுதியில் சரியான வங்கி வசதி இல்லை. டவுன்ஹால், குனியமுத்தூர் அல்லது போத்தனூருக்கு சென்றுதான் வங்கி சேவையைப் பெறமுடிகிறது. வங்கி கிளை துவங்க கடந்த 10 -ஆண்டுகளாகப் பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிக்கான இடம் மற்றும் கட்டிடம் கட்டிதீதரவும் இப்பகுதி மக்கள் தாயாராக உள்ள நிலையில் வங்கிகள் தங்களது கிளையினை அமைத்திடத் தயக்கம் காட்டி வருகிறது.
2. இப்பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 90 மாணவர்களுக்கான வசதிகள் மட்டுமே உள்ளது. இப்பகுதி மாணாக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகச் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உயர் கல்விக்காகத் தனியார்ப் பள்ளிகளுக்கோ அல்லது வெளிப்பகுதியில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கோதான் செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் செயல்படும் துவக்கப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் அல்லது புதிய மேல்நிலைப் பள்ளியினை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே இருக்கும் அரசு நிலத்தில் கட்டிடவேண்டும்.
3. இப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணாக்கர்களின் அறிவு மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான நூலகம் இப்பகுதியில் இல்லை. நாட்டின் எதிர்கால தலைமுறையின் அறிவு, ஆற்றல் மேம்பாட்டினை உயர்த்த உதவும் வகையில் ஒரு சிறந்த நூலகம் அமைத்திட வேண்டும்.
4. இப்பகுதியில் சிறார்கள் மற்றும் பெண்களுக்குப் பொழுதுபோக்கு வசதிகள் இல்லை. எனவே இப்பகுதியில் பூங்கா வசதி மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும்.
5. இப்பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையம் அமைத்திட வேண்டும்.
6. மதுக்கரை, குனியமுத்தூர் போத்தனூர் கரும்புக்கடை பகுதிகளிருந்து ஆயிரக்கணக்கான மாணவ -மாணவியர்கள் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான பேருந்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. காலை-மாலை வேளைகளில் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் கூடுதல் பேருந்துகளை மற்றும் மினிபஸ்கள் இயக்கிட வேண்டும்.
7. கரும்புக்கடை சாரமேடு சாலையானது மிகுந்த போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெருக்கடியைக் குறைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் வரை மினிப் பேருந்து, ஷேர் ஆட்டே அல்லது பேட்டரி கார்கள் இயக்கிட வேண்டும்.
8. கரும்புக்கடை மற்றும் போத்தனூர் என்.பி.இட்டேரி பகுதிகளில் குடிநீர் சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றிடப் படவில்லை. மேலும், இப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மிகக்குறைந்த சுகாதாரப் பணியாளர்களே உள்ளதால் குப்பைகள் தேக்கமடைந்து சுகாதார சீர்கேடு பரவிடக் காரணமாக இருக்கிறது.
9. கோவையில் பெண்களுக்கான அரசு கல்லூரி இல்லை என்பதால் முஸ்லிம் பெண்களின் மேற்படிப்பு தடைப்படுகிறது. முஸ்லிம் பெண்களின் மேற்படிப்பு தொடர்வதற்கு உதவும் வகையில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகியவை துவங்க வேண்டும்.
10. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்கள் தொழுகை வழிபாடு நடத்துவதற்கு அறை ஏற்பாடு செய்திட வேண்டும்.
11. முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை முறைப்படி கிடைப்பதில்லை. கல்வி உதவித்தொகை முறையாகவும் எளிமையாகவும் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். மேலும் கல்விக்கான வங்கிக்கடன் நடைமுறைகளை எளிமைப்படுத்திட வேண்டும்.
12. முஸ்லிம் சிறு குறுந்தொழில் செய்வோருக்கு வங்கிக்கடன்கள் கிடைப்பதில்லை. இப்பகுதியின் மீது துவேஷ முத்திரை குத்தி வங்கிக்கடன்களை நீராகரிக்கிறார்கள். இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். ஒருசிலர் செய்யும் தவற்றின் காரமாக ஒரு பகுதியினை சார்ந்த மக்கள் அனைவரையும் அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.