கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் பகுதியை சேர்ந்த 80 வயதான ஆதிவாசி ஒருவர் காளான் பறிக்க சென்ற போது ஒற்றை யானை மிதித்து பலி. மழையால், உடலை மீட்க்கும் பணியில் தொய்வு.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் ஆதிவாசிகள் பகுதியை சேர்ந்த 4 பேர் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் காளான் அதிக அளவில் காணப்பட்டதால் தினந்தோறும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று காளான் பறித்து வந்தனர்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை அடர்ந்த வனப் பகுதிக்குள் முட்புதர்கள் அதிகம் உள்ள பகுதியில், காளான் பறிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் மறைந்து இருந்த ஒற்றை காட்டு யானையை பார்த்து அலறியடித்து ஓட தொடங்கினர். இதில், 80 வயது வெள்ளியங்கிரி என்பவர் யானையிடம் சிக்கிக் கொண்டார்.
80 வயதான வெள்ளியங்கிரியை யானை துதிக்கையால் தூக்கி அடித்து கொன்றதாக உடன் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தொடர் மழை மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ளதால், உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாலை நேரம் என்பதால் வெளிச்சமின்மை மற்றும் அட்டுக்கல் வனப்பகுதியில் மழை பெய்து வருவதால், நாளை காலை தான் இறந்த முதியவரின் உடலை எடுக்கும் பணி நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.