கோவை மாவட்டம் அன்னூரில் சாலையில் சென்ற காவலர் உட்பட 60க்கும் மேற்பட்டோரை கடித்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் சாலையில் சென்ற காவலர் உட்பட 60க்கும் மேற்பட்டோரை கடித்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்துக்கு புகுந்த அந்த நாயை பிடிக்க சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூரில் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் கோவை சாலையிலிருந்து பேருந்து நிலையம் அருகே வந்த வெறிநாய் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் பொன்மணியை கடித்து குதறியது.
இதையடுத்து, அங்கிருந்து அவினாசி சாலை வழியாக ஓடிய நாய் சாலையில் சென்ற முப்பதுக்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்துவிட்டு, அவிநாசி சாலையில் சென்றது.
பின்னர் குன்னத்தூராம்பாளையம், ஊத்துப்பாளையம், நரியம்பள்ளி, கருவலூர் பகுதிகளில் மேலும் 60க்கும் மேற்பட்டோரை அந்த வெறிநாய் கடித்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் அவிநாசி காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, அந்த நாயை பொதுமக்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் விரட்டி சென்ற போது, அந்த வெறிநாய் கோவை மாவட்ட எல்லையில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூர் பகுதிக்குள் சென்றது. அங்கும் பெரும்பாலானோரை கடித்து சென்றது.
இதனையடுத்து, அந்த நாயை பிடிக்க அப்பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்ட நிலையில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாய் அங்கிருந்து தப்பி ஓடியது. தற்போது, திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த வெறி நாயை தேடி வருகின்றனர்.
மேலும், சாலையில் செல்வோர் தெரு நாயை பார்த்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அரைமணிநேரத்தில் 60க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததால் ஒரே நேரத்தில் அன்னூர் அரசு மருத்துவமனையில் 35 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர். பிறர் மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றனர்.
அன்னூர் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்து உள்ளதால், அதனை கட்டுப்படுத்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாய்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.