மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரச் சொல்லி அக்டோபர் மாதத்திற்கான சத்துணவு பொருட்கள் வழங்கியுள்ளனர். இதில் முட்டைகள் கெட்டுப்போய் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.
திருப்பூர்: திருப்பூரில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் புழுக்கள் இருந்தது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு வாவிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் 143 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், 75 மாணவ மாணவிகள் சத்துணவு திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் செயல்படாமல் உள்ளதால், சத்துணவு திட்டம் தடைபட கூடாது என்பதால், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் சரியாக சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாதம் முதல் வாரத்தில் அக்குழந்தைகளுக்கு அரிசி, 10 முட்டை, 1 கிலோ ஆயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சத்துணவு பொருட்கள், இன்று மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரச் சொல்லி வழங்கியுள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாணவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முட்டைகள் கெட்டுப்போய் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.
இதை பார்த்த பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகளின் உணவில் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும், இதுபோன்ற கெட்டுப்போன முட்டைகளை வழங்குவதால், குழந்தைகளின் உயிருக்கே கூட ஆபத்து நேர வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அழுகிப்போய் புழுக்கள் ஊரும் முட்டைகளில் கடும் துர்நாற்றம் வீசும், இருப்பினும் அதை எவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கினர் என்ற சந்தேகத்தை எழுப்பினர். எனவே, சம்பவம் குறித்து அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து, அந்த பள்ளியில் சத்துணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும், இப்பள்ளிக்கு சத்துணவு திட்ட பள்ளி பொறுப்பாளர்கள் கடந்த 5 மாதங்களாக நியமிக்கப்படவில்லை என்றும் துவக்கப் பள்ளியில் உள்ள ஊழியர் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அருகாமையில் உள்ள வாவிபாளையம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமைப்பதற்காகச் சென்று விடுவதால், இங்கு பொறுப்பாளர் இல்லாததால் மற்றொரு பள்ளியில் இருந்த ஊழியரை வரவழைத்து முட்டைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வாவிபாளையம் துவக்கப்பள்ளி ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.