போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை: கோவையில் பெட்ரோல், டீசல் விலை100 ரூபாயை தாண்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தபெதிகவினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து செல்லும் நிலையில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தது.
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக குப்புசாமி நாயுடு மருத்துவமனை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டது.
எனினும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வந்த தபெதிகவினர் பெட்ரோல் பங்க் முன்பாக பிரதமர் மோடி படத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து பேட்டியளித்த தபெதிக அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பதால் மக்கள்படும் வேதனையை பிரதமரின் புகைப்படத்திற்கு மலர் தூவி காட்டியிருக்கின்றோம் என தெரிவித்தார்.
பெட்ரோல் விலையை உயர்வதால் மக்களுக்கு ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.