காட்டு யானைகளை விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சங்கர், கிருஷ்ணா என்ற 2 கும்கி யானைகள் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள மதுரை ஊராட்சியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, மதுரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருகின்றன.
கோவையில் அட்டகாசம் செய்த விநாயகன் என்ற காட்டு யானையை வனத் துறையினர் பிடித்து, முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அந்த யானை தினமும் கூடலூர் - முதுமலை எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
சமீபத்தில் ஓடக்கொல்லி பகுதியில் லீலா என்பவரது வீட்டை அந்த யானை சேதப்படுத்தியது. மேலும், விவசாயப் பயிர்களை நாசம் செய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோழிகண்டி பகுதியை சேர்ந்த வாசு என்பவரது வயலில் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.
இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானையை விரட்டினர். பின்னர் கரிக்கணக்கொல்லி, போலீஸ்மட்டம் இடங்களுக்கு விநாயகன் யானை சென்றது. இதனால், அங்குள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்தனர். அந்த யானை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சங்கர், கிருஷ்ணா என்ற 2 கும்கி யானைகள் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விநாயகன் யானை வரும் கிராமப் பகுதிகளில் கும்கி யானைகளுடன் ரோந்து சென்றனர். வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறும் பகுதியில் இரண்டு கும்கி யானைகளும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, கும்கி யானைகள் கிராமப் பகுதிகளில் முகாமிட்டுள்ளதை உணர்ந்தால் விநாயகன் யானை ஊருக்குள் வராது என்றனர்.