மேலும், நல்ல மனிதராக, சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிக்கான காசோலைகள் காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்மானமுள்ள ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திக்கொண்டு இருக்கின்றார் எனவும், கோவை மாவட்டத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற்றி கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தால் 100 சதவீதம் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்றார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார்.
அப்போது, கோவை மாவட்டத்தில் 203 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்வாரியம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் மின்வாரியத்தின் கடன்சுமை 1.59 லட்சமாக இருப்பதாகவும் வருடத்திற்கு 15 ஆயிரம் கோடியாக வட்டி மட்டுமே செலுத்தும் நிலை இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இதற்கு காரணம் குறித்து ஆய்வு செய்த போது, கடந்த ஆட்சியில் 50 விழுக்காடு மின்சாரம் கொள்முதல் செய்ய செலவிடப்பட்டுள்ளது எனவும், 10 ஆண்டுகளில் சொந்த நிறுவு திறன் 53 மெகாவாட் மட்டும் அதிகபடுத்தப்பட்டு இருக்கின்றது என்றார்.
உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2500 மெகாவாட்டாக இருக்கின்றது எனவும், இடைவெளியை குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தாமல் வைத்திருக்கும் திட்டங்கள் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, 4 சதவீதம் கமிஷன் பெறுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு,
அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும் நேற்றே இதற்கு பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன் என்று கூறினார்.
மேலும், நல்ல மனிதராக, சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் எனவும் ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட அவர் இப்படி பேசுகின்றார் எனவும் இதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனல்மின்நிலையங்களை பொறுத்தவரை மின்வாரிய நிறுவு திறன் 4320 மெகாவாட் எனவும், கடந்த ஆட்சியில் 1800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இந்த அரசு பதவியேற்ற 5 மாத காலத்திற்குள் 3500 மெகாவாட்டாக உயர்த்தி இருக்கின்றோம் என்று கூறினார்.
ஒரு நாள் மின் உற்பத்திக்கான தேவை 60 ஆயிரம் டன் நிலக்கரி எனவும் 4 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை நிலக்கரி பற்றாக்குறை என்பது வராது, சீரான மின் விநியோகம் இருக்கும் எனவும், தமிழக முதல்வர் தினந்தோறும் இதை கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மின்வாரியத்தில் பணியில் சேர்க்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக இருக்கின்றது எனவும் மின்வாரியத்தின் செலவீனங்களை குறைக்க வெளிப்படை தன்மையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது எனவும் புதிய பணிநியமனங்கள் வரும் போது இந்த பிரச்னைகள் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றார்.
டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு விற்ற 134 பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், துறை சார்ந்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
கோவையில் சூயஸ் நிறுவனம் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு கூட்டத்திற்குப் பின்பு இருக்கும் நிலையினை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பலர் கொண்டனர்.
