இந்த விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி செவிலியர் பயிலும் மாணாக்கர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
கோவை: கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டயப் படிப்பில் இணையும் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழா கோயம்புத்தூர் வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி புதிய அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி செவிலியர் பயிலும் மாணாக்கர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்கள். கங்கா செவிலியர் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் திருமதி. ரமா ராஜசேகரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.
சிறப்பு அழைப்பாளர் குமுதா பழனிசாமி, (துணைத் தலைவர், இந்திய செஞ்சிலுவை சங்கம்), டாக்டர். எஸ்தர் ஜான் (டீன் மற்றும் கல்லூரி முதல்வர்) ஆகியோர் முதலாம் ஆண்டு பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டயபடிப்பு மாணாக்கர்களின் கையில் உள்ள விளக்கின் ஒளியை ஏற்றி வைத்தனர்.

தாங்கள் ஒரு அர்ப்பணிப்பு உள்ள செவிலியராக கடமையாற்றுவோம் என்று பேராசிரியை புஷ்பா (துணை முதல்வர்), அவர்கள் கூற மாணாக்கர்கள் அதை உறுதிமொழி எடுத்தார்.

தலைமை விருந்தினர், டாக்டர். எஸ். ராஜசபாபதி, (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர், புனரமைப்பு மைக்ரோ சர்ஜரி & தீக்காயம், கங்கா மருத்துவமனை), அவர்கள் தனது உரையில் ஒவ்வொரு செவிலியரும் தங்கள் தொழிலில் இருக்க வேண்டிய தன்னலமற்ற சேவையை வலியுறுத்தினார்.
மேலும், தகவல் தொடர்பு திறன், உணர்ச்சி நிலைத்தன்மை, ஆலோசகர், கல்வியாளர் போன்ற அடிப்படை குணங்கள் இருக்க வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செவிலியர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த வேண்டும். மேலும், நோயாளியின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சிறப்பு அழைப்பாளர் குமுதா பழனிசாமி அவர்கள் பேசும் போது, செவிலியர் துறையை தேர்ந்தெடுத்த மாணாக்கர்களைப் பாராட்டினார்.
மாணாக்கர்கள் சமூக அக்கறை, ஏழை நோயாளிகளிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும், செவிலியர் பணியின் முக்கியத்துவத்தையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் மற்றும் கற்பிக்கவும், நோயாளியை கவனிப்பதற்கான ஆர்வம், பணிவு, நெறிமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்,
பல்வேறு துறைசார்ந்த செவிலியர்களின் சேவையைக் காட்சிப்படுத்தும் விதமாக கொலு வைக்கப்பட்டது.
விழாவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் "கை விளக்கு ஏந்திய காரிகை" என்பதை விளக்கும் வகையில் மாணவி ஒருவரும், புதுமையான புதிய சகாப்தத்தைச் சித்தரிக்கும் வகையில் விண்வெளி கப்பலில் விண்வெளி செவிலியராக ஒருவரும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தினர்.
முடிவில், டாக்டர். எஸ்தர் ஜான் (டீன் மற்றும் கல்லூரி முதல்வர்) அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள். தேசிய கீதம் இசைக்க விழா நிறைவடைந்தது.