இந்த அரசாங்கத்தை மக்கள் வெறுப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை: கோவை கோனியம்மன் ஆலயம் முன்பு இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றும் திமுக அரசை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக தமிழகத்திலுள்ள அனைத்து மாவடங்களிலும் உள்ள முக்கிய கோவில்களுக்கு பிரசார யாத்திரை கடந்த 16ம் தேதி துவங்கி இன்று கோவையில் நடைபெற்று வருகின்றது.
கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த பிரசார யாத்திரை நடைபெற்றது. இந்த திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டுமென சாமியிடம் முறையீட்டு மனு வைத்து பூஜை செய்தனர்.
பின்னர், கோவிலின் முன்பு வாகனத்தில் அலங்கரித்து வைத்திருந்த அம்மன் சிலையிலிருந்து திமுக அமைச்சர் சேகர்பாபு தங்க நகையை திருடுவது போன்று சித்தரித்து போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் கடேஸ்வரா சி. சுப்ரமணியம் கூறுகையில்;
தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திக அரசாங்கம் நடந்துக்கொண்டிருகின்றது. இந்து கோவில்களில் மட்டும் இருக்கும் நகைகளை எடுத்து உருக்கி தங்கக்கட்டி பண்ண வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதனை கண்டித்து 16ம் தேதி சென்னையில் தொடங்கி அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களிலும் பிரச்சார யாத்திரை ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் நடைபெறுகின்றது. பக்தர்கள் அனைத்து இடங்களிலும் வரவேற்கின்றனர். அரசாங்கத்திற்கு கோவில் நகையை உருக்குவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. 60 ஆண்டுகளாக நகைகளின் இருப்பு குறித்து கணக்கு இல்லை. 2015ல் உச்ச நீதிமன்றம் ஆடிட்டர் மூலம் கணக்கு காண்பிக்க வேண்டும். நகை உருக்குவதன் மூலமாக உழல் நடக்கும் என்று நினைக்கிறோம். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் நகைகள் அந்தந்த கோவிலுக்கு உபயோகப்பட வேண்டும். திமுக ஊழல் செய்தது என்று சர்காரிய கமிஷன் அமைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சர்க்கரையை காணோம் என்று கேள்வி வந்தபொழுது சர்க்கரை எறும்பு சாப்பிட்டது, சாக்குகளை கரையான் சாப்பிட்டு விட்டது என்பது போல் இன்று தங்கக்கட்டிகள் நவீன முறையில் சாப்பிடப்படும்.
பங்களாதேஷ்யில் ஹிந்து கோவில்களை அடித்து நொறுக்கினர். 10க்கும் மேற்பட்ட ஹிந்துகள் இறந்தனர். தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டிருக்கின்றது. மத்திய சர்கார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவை, திருப்பூர் பகுதிகளில் கலவரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். இவர்களால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுடன் நக்சலைட் அணி சேரக்கூடும். இந்த அரசாங்கத்தை மக்கள் வெறுக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.