செயினை பத்திரமாக காவல் நிலையத்தில் கொடுத்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராதாகிருஷ்ணனுக்கு காவல்துறையினர் மற்றும் செயின் உரிமையாளர் பாராட்டுக்கள்.
திருப்பூர்: திருப்பூரில் ஜவுளிக்கடையில் கீழே கிடந்த தங்கச் செயினை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த முதல்நிலை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவி, இவர் திருப்பூரில் குமரன் சாலையில் உள்ள தனியார் பத்திர டைபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர், சனிக்கிழமை இரவு தீபாவளி பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள தனியார் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கே அனைவருக்கும் உடைகளை வாங்கிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் கழுத்திலிருந்த 1.5 சவரன் நகை கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காத தேவி, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில், அந்த கடைக்கு தீபாவளி உடைகள் வாங்குவதற்காக வந்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது, தங்கச் செயின் கீழே கிடப்பதை பார்த்து அந்த செயினை எடுத்த காவலர் ராதாகிருஷ்ணன் அந்த தனியார் கடையின் மேலாளரிடம், அவரது முழு விவரங்களையும் கொடுத்துவிட்டு, இந்த செயினை காணவில்லை என யாராவது கேட்டால் அவர்களை என்னை தொடர்பு கொள்ளுங்கள் என கூறிவிட்டு வந்துள்ளார்.
பின்னர், செயினை பறிகொடுத்த தேவி அந்த தனியார் கடையின் மேலாளரிடம் தன்னுடைய செயினை காணவில்லை என புகார் அளித்துள்ளார். உடனடியாக, அந்த ஜவுளிக் கடை மேலாளர் திருப்பூர் தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், முதல்நிலைக் காவலர் ராதாகிருஷ்ணன் அவர்களை தொடர்புகொண்டு செயின் பற்றிய முழு விவரத்தை கேட்டுவிட்டு, அடுத்த நாள் காலை காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
அதன்படி, நேற்று காலை செயினை பறிகொடுத்த தேவியிடம் காவல் ஆய்வாளர் பிச்சையா முன்நிலையில் அந்த செயின் ஒப்படைக்கப்பட்டது.