கோவை மாநகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால் மாநகராட்சியைக் கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் குப்பைகளைக் கொட்டும் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் ஆவேசம்.
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால் மாநகராட்சியைக் கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் குப்பைகளைக் கொட்டும் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் ஆவேசம் அடைந்தனர்.
கோவை உக்கடம் 74-வது வார்டு பகுதியில் குப்பைகள், மற்றும் இறைச்சி கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டப்பட்டு சுகார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்றுகள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி இல்லத்தரசிகள் கூறும்போது, இந்தப்பகுதியை மாநகராட்சி கண்டுகொள்ளாத பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வருவதில்லை.
மேலும், இந்த பகுதி முழுவதும் சாக்கடை எடுப்பதற்கும் யாரும் வருவதில்லை எனவே இந்த பகுதியைச் சேர்ந்த நாங்களே சாக்கடை எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், அதேபகுதியைச் சேர்ந்த மெஹாஜுதீன் கூறும்போது, இந்த பகுதியில் 3- ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறோம், இந்த பகுதி மக்களைக் கோவை மாநகராட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
தினமும் டன் கணக்கில் இங்குக் குப்பைகள் கொட்டப்படுவதால், சுகாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கோவையில் சாரல் மழை பெய்துவருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் தெருவிளக்குகளும் இல்லாததால் இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்லும் அவலமும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உடனடியாக கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய சொந்த செலவில் இங்குள்ள குப்பைகளை எடுத்து கோவை மாநகராட்சி வளாகத்தில் கொட்டி, மாநகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடைப்பெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.