வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்கவும், குற்றப்பின்னணி இல்லாதவர்கள் பாதுகாப்பாக பணியாற்றலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்கவும், குற்றப்பின்னணி இல்லாதவர்கள் பாதுகாப்பாக பணியாற்றலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் மாநில மற்றும் தேசிய தொழில் வளர்ச்சியில் அதிக பங்களிப்பை கொண்டுள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் உற்பத்தித்துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி, வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை தொழில் நிறுவனத்தினர் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து வருகின்றனர். அனைத்து தொழிலாளர்களிடமும் ஆதார் பெறப்பட்டு அதன் பேரிலேயே அவர்களுக்கு இவ்விரு மாவட்டங்களிலும் தொழில் நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிழைப்புக்காக தமிழகம் வரும் ஒருசில வடமாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் காரணத்தால் அனைத்து வெளிமாநில தொழிலாளர்கள் மீது உள்ள நம்பிக்கை போய்விடுகிறது.
இதன் காரணமாக, குற்றப் பின்னணி இல்லாமல் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் அவர்களுக்கும் தமிழகத்தில் தங்கி பணியாற்ற பாதுகாப்பில்லாத ஒரு சூழல் உள்ளது போன்ற நிலை ஏற்படுகிறது.
ஏற்கெனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து தொழில் நிறுவனங்கள் மீண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பார்வை சமுதாயத்தில் மாறிவருவது தொழில்துறையினர் மத்தியில் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண தொழில்துறையினர் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கோவை குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின்(COSMAFAN) தலைவர், சிவசண்முக குமார் கூறியதாவது,
கோவை மாவட்டத்தில் செயல்படும் 600க்கும் மேற்பட்ட பவுண்டரிகளில் மொத்தம் பணியாற்றும் தொழிலாளர்களின் 80 சதவீதத்தினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அரசின் வழிகாட்டுதலின்படி வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முன் அவர்களது ஆதார் அட்டை பெறப்பட்டு விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்கிறோம்.
மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்து விடுகிறோம். இருந்தபோதும் ஏதேனும் ஒரு குற்றச் சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணை நல்ல முறையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு, வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் எவ்வித குற்ற பின்னணியும் இல்லாமல் தமிழகத்தில் பிழைப்புக்காக வந்து பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளதை உறுதிப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொழில் நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் பவுண்டரி தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக வெப்பம் மற்றும் கடுமையான பணிசூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் பவுண்டரி தொழிற்சாலைகளில் பணியாற்ற ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே பவுண்டரி தொழிற்சாலைகள் அனைத்தும் வெளிமாநில தொழிலாளர்களை நம்பியே செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்(TEA) தலைவர், ராஜா எம் சண்முகம் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் வழங்கும் ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியா என்பதை சரி பார்ப்பது என்பது நடைமுறையில் தொழில்துறையினருக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மட்டுமின்றி கன்டெய்னர்கள் தட்டுப்பாடு என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பணியில் அமர்த்தப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் மீதான பிரச்சினைகள் என்பது பெரிய தலைவலியை தொழில்துறையினருக்கு ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு வழங்க வேண்டிய அனைத்து உதவிகளையும் தொழில்துறையினர் தொடர்ந்து வழங்க தயாராக உள்ளதாக கூறினார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (CODISSIA) தலைவர், ரமேஷ் பாபு கூறுகையில்,

அரசின் வழிகாட்டுதலின்படி வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் அட்டை பெறப்படுகிறது. இருப்பினும் ஆதார் அட்டை நம்பகத்தன்மை குறித்து தொழில் துறையினரே கண்டறிய உதவும் வகையில் பிரத்தியேக செயலி(Application) அரசு ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கையால் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்துவதற்கு முன்பு தொழில்துறையினர் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து தெரிந்துகொள்ள உதவுவதுடன் போலி ஆதார் அட்டை கொடுத்து பணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்பவர்கள் குறித்த விபரங்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க உதவியாக இருக்கும். ஆதார் அட்டை கொடுத்து பணியில் சேர்க்கப்படும் தொழிலாளர்களின் பின்னணி குறித்து கண்காணித்து அவர்கள் ஏதேனும் சமூக விரோத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளவர்களா என்பது குறித்து காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.