சிறுவனுக்கு சரியான அளவு இல்லாத காரணமாக, காலனியை பொருத்த முடியாத சூழல் ஏற்பட்டது. காலனியை சரி செய்யும் நபர் கால தாமதம் செய்ததின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என ஆட்சியர் விளக்கம்.
கோவை: கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடித்ததாக செய்தி வெளியான நிலையில், அந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, மாற்று திறனாளிகள் நலத்துறையினர், அந்த சிறுவனுக்கு சேர வேண்டிய காலனியை இன்று வழங்கினர்.
கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம், தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்திருந்தார், வேல்முருகன். அப்போது, மாற்றுத்திறனாளியான வேல்முருகனின் மகனுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட காலனிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறுவனுக்கு அணிவித்தார். ஆட்சியரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், அந்த நிகழ்வு முடிந்ததும், காலனியை பழுது பார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், அவற்றை திரும்ப பெற்று கொண்டதாகவும், அதிகாரிகளிடம் கேட்டபோதும், காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக, வேல்முருகன் நேற்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றது.உடனடியாக, சிறுவனுக்கு காலனி வழங்க மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.மேலும், சிறுவனுக்கு சரியான அளவு இல்லாத காரணமாக அதனைப் பொருத்த முடியாத சூழலில் சரி செய்ய கொடுக்கப்பட்டதாகவும் காலணிகள் சரி செய்யும் நபர் கால தாமதம் செய்ததின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.