வால்பாறையை அடுத்துள்ள டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான உருளிக்கல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: தொழில் வரி பிடித்தம் ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது உருளிக்கல் தேயிலைத் தோட்டம். இது டாடா நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த உருளிக்கல் தேயிலைத் தோட்டத்தின் இரண்டாம் பிரிவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், இவர்களுக்குத் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் மூலம் ஊதியத்திலிருந்து நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தேயிலைத் தோட்ட நிர்வாகம் தங்களுடைய சம்பளத்திலிருந்து தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று காலை வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
மேலும், இவர்கள் பணியாற்றும் பகுதியில் தேயிலைக் கொழுந்து உற்பத்தி குறையும் காலத்தில் மாற்றிடத்திற்கு பணிக்கு அனுப்பி வந்தனர். அப்படி பணிக்கு அனுப்பும் பொழுது அவர்கள் பணியாற்றிய பகுதியிலிருந்து மாற்றிடத்திற்கு போய் வருவதற்குப் போக்குவரத்து வசதி செய்து தரப்படுவது வழக்கம்.
அதன்படி, லாரி மூலம் பணிக்குச் சென்ற இடத்திற்குக் கொண்டு இறக்கி விடுவதும் பணி முடிவுற்றதும் லாரி மூலம் பழைய இடத்தில் கொண்டு வந்து விடுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்களை மாற்றிடத்திற்கு பணிக்குச் செல்லும் படி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பணிக்குச் செல்ல லாரியோ மற்ற எவ்வித வாகனமும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
ஆகவே, தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டக்கள அலுவலரிடம் புகார் அளித்தனர். அப்போது அவர் நிர்வாகத் தரப்பில் வாகனம் எதுவும் செய்து தரப்படவில்லை. நடந்து சென்று பணி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தங்களால் பணியாற்ற இயலாது என்று மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தினர். நிர்வாகத் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்காத நிலையில் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வால்பாறை தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ. அமீது நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ. அமீது மற்றும் விடுதலை சிறுத்தை வீரமணி, ஐஎன்டியூசி கருப்பையா, இ.கம்.பெரியசாமி மாணிக்கம், மதிமுக கல்யாணி, திமுக செந்தில் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் உருளிக்கல் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மதியம் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பி சென்றனர்.