அரசு கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்து, கோவையில் வேறு இடத்தில் நிலம் மட்டுமே வாங்க முடியும், ஆனால் வீடு கட்ட இயலாது - உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர்.
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விமான நிலையத்தை சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடும் வழங்கப்படுகிறது. சமீபத்தில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான நிலுவை தொகை ரூ.1,132 கோடியை விடுவித்து போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசின் இழப்பீடு தொகையை வைத்து நிலம் மட்டுமே வாங்க முடியும் என்றும், அதில், வீடு கட்ட முடியாது என்று கூறி உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர் 30க்கும் மேற்ப்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக உப்பிலிப்பாளையம் கிராமத்தில் உள்ள சாஸ்தா நகர், அருள் முருகன் நகர், காந்தி நகத் ஆகிய பகுதிகளில் உள்ள 110 வீடுகள் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் 20 வீட்டார்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம், அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையானது 4 செண்ட் இடத்தில் தார்சு வீடு கட்டி இருப்பவர்களுக்கு 33 லட்சம் முதல் 38 லட்சம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், 2 செண்ட் சிமெண்ட் சீட் வீடு இருப்பவர்களுக்கு 15 லட்சம் இழப்பீடு என்பது மிகவும் குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
அரசு கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்து, கோவையில் வேறு இடத்தில் நிலம் மட்டுமே வாங்க முடியும், ஆனால் வீடு கட்ட இயலாது என்று தெரிவித்தனர். எனவே, மாற்று இடம் வழங்க வேண்டுமென, உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.