உத்தரப்பிரசேத மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 144 தடை உத்தரவு பிறபிக்கபட்டதின் காரணமாகவே காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கபட்டதாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பொதுமக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் புதிய கோரிக்கைகள் குறித்தும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புலியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடையை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் எனவும் கடந்த நான்கு மாதங்களாக முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என மனு அறித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு இன்றியும் இட வசதி இல்லாதது உள்ளிட்ட தனது தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதோடு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சம்பளம் உயர்த்தபட்டதாகவும், இத்திட்டத்தின் கீழ் சம்பளப் பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் கிடைக்கப்பெறும்படி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டத்தை விவசாய மக்களோடு இணைந்துச் செயல்பட வேண்டும் என்பதுக்குறித்து மத்திய அரசு ஆராயும் என தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் எட்டு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், அம்மாநிலத்தின் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உ.பியில் தேர்தல் வருகின்ற காரணமாக செத்து போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்வதாகவும் உயிரற்ற உடலை வைத்து அரசியல் செய்வது வேதனையான விஷயம் என விமர்சனம் செய்தார். இதோடு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அனுமதிக்கப்படாததற்கு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது தான் காரணம் என கூறினார். இந்நேரத்தில்சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது. எனவே கலவரம் ஏற்படும் சூழலில் அங்கு செல்கிறார் என்றால் அங்கு சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுக்கு உள்ளதாலும் சூழலின் தன்மையை கருதியே அவர் அனுமதிக்கபடவில்லை என வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
குறிப்பாக கோவை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் பிரியங்க காந்தி அனுமதிக்கப்படாததற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.