ஏழை எளிய மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டிக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்.
கோவை: பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் முடிவின்படி காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று கோவையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும், குடியுரிமை திருத்த சட்ட மசோதா, விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டாக இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.
இதனையொட்டி, தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக, கோவை ஜில்லா தேசிய பணியாளர் தொழிலாளர் சங்கம் தலைமை அலுவலகத்தின் முன்பு மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர், மையுரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயகுமார்: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கின்ற கொள்கைகளும், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வும், போன்ற இந்தியாவினுடைய ஏழை எளிய மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. இதனை, கண்டிக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் கட்சிகள் தமிழகத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றன.
இதே போல, காங்கிரஸ் தலைமையில் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை அழிவின் பாதைக்கு எடுத்துச் செல்லும் மத்திய பாஜக அரசு, தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும், என்றார்.