திருட்டு, செல்போன் பறிப்பு, கூட்டு கொள்ளை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட பழங்குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் கூட்டு கொள்ளை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரத்தில் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு, கூட்டுக்கொள்ளை ஆகிய குற்றங்களைத் தடுக்கவும், திருப்பூர் மாநகரத்திலுள்ள பழங்குற்றவாளிகளை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலையத்தில், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற காளிதாஸ், சௌந்திரபாண்டியன், அபினேஷ் ஆகியோரையும், தொடர்ந்து 15-வேலம் பாளையம் காவல் நிலையத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட விஜய், கவின் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற செல்வராஜை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.