உணவகங்கள், பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் என அத்தியாவசிய கடைகள் தவிர மீன் அங்காடி உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும் மூடல்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தால் முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடுதலாகக் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், தவிர மற்ற கடைகள் சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவானது ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அமலுக்கு வந்திருக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், பேக்கரிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சிமுறையில் அனுமதிக்கப்படுகிறது.
உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் உடனே இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடர்கின்ற நிலையில் பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கட்டுப்பாடுகளால் காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் பன்னடுக்கு வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதேபோல் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மொத்த மற்றும் சில்லரை மீன் மார்க்கேட் மூடப்பட்டுள்ளது. இதனால் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் திரும்பிச்சென்றனர்.
மேலும் மொத்த மீன் மார்க்கேட் அமைந்துள்ள லாரிபேட்டை பகுதியில் ஒரு சில மீன் வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவினை மீறி சாலையில் வைத்து மீன் விற்பனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
கோவையின் முக்கிய சாலைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனையகங்களை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டு இருந்ததால் சாலைகள் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்பட்டது.