கோவை: பொள்ளாச்சியில் தடுப்பு ஊசி செலுத்தும் இடத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சுகாதாரத்துறை செவிலியர்கள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்
கோவை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்த அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. தடுப்பூசி வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், பணிகள் மாலை 5 மணிக்கு தொடங்கியது.
சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் சென்றனர். இந்நிலையில், பள்ளியில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இரவு நேரத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தடுப்பூசி மையங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
"முன்னதாக, மதியம் 2 மணிக்கு தடுப்பூசி செலுத்துவதாக தெரிவித்திருந்தனர், ஆனால் மாலை 4 மணிக்கு தான் மருந்து கொண்டு வரப்பட்டது. தடுப்பூசி முகாமுக்கு கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் போதிய வசதிகள் செய்து தரவில்லை. குறிப்பாக, மின்விளக்கு வசதி இல்லாததால் செவிலியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக செல்போன் வெளிச்சத்தில் இரவு 8 மணிவரை, செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்", என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.