கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பெய்துவரும் கனமழையால் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பெய்துவரும் கனமழையால் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், சித்திரைச் சாவடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் தடுப்பணையில் இருந்து நீர் அருவி போல் கொட்டும் அழகிய காட்சி காண்போரைக் கவர்ந்திழுக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்தது.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைப் பகுதி மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.