கோவை: தமிழ்நாட்டின் பருவ நிலையில் காற்று வீசத்தொடங்கியதை அடுத்து இப்போது மொத்த மின் உற்பத்தியில் காற்றாலைகள் வாயிலாக 30 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.
கோவை: தமிழ்நாட்டின் பருவ நிலையில் காற்று வீசத்தொடங்கியதை அடுத்து இப்போது மொத்த மின் உற்பத்தியில் காற்றாலைகள் வாயிலாக 30 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மரபுசாரா ஆற்றல் உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியா முழுவதும் 38 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றாலை கட்டமைப்புகள் உள்ளன.
இதில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான காற்றாலை கட்டமைப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் மே இறுதியில் துவங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளை போலவே முன்கூட்டியே அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் தொடங்கியது. காற்றின் வேகம் சீராக இல்லாத காரணத்தால் மின் உற்பத்தியில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. தற்போது ஜூன் முதல் வாரத்தில் இருந்து காற்று வேகம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் காற்றாலை வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து இந்திய காற்றாலைகள் மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(Indian Wind Power Association, (IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது," கடந்த ஆண்டு காற்றாலை சீசனில் மொத்தம் 10 ஆயிரத்து 816 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் 10,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றைய சூழலில் தமிழகத்தில் தினமும் சராசரியாக 318 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 30% அதாவது 92 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து காணப்படும். ஜூலை மாதத்தில் அதிக மின் உற்பத்தி செய்யப்படும். ஆடி மாதத்தில் காற்று மிக வேகமாக வீசும் என்பதால் பீக்(Peak) சீசன் என அந்த மாதம் அழைக்கப்படுகிறது. அதிக காற்று வீசும் காலகட்டங்களில் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் காற்றாலைகளின் மின் உற்பத்தி பங்களிப்பு மிக கணிசமாக அதிகரிக்கும்," என்று கூறினார்.