கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு முறை கோவைக்கு வந்து கொரொனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து உள்ளார். தற்போது, கோவையில் 60 சதவிகிதம் வரை கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்துள்ளது'' என்று தெரிவித்தார்.
மேலும், ‘‘கரும்பூஞ்சை நோய்க்கு பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார். கோவையில் கொரோனா பெருந்தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகக்கட்டணம் வசூல் செய்வது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், தற்போது அதிகக் கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளதாகவும், அதிக கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறிய அவர், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க, காவல் துறைக்கு அறிவுறுத்தபட்டு இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கோவையில் சூயஸ் திட்டப் பணிகள் ஒப்பந்தம் கொடுத்து இருப்பதை இன்று பார்வையிடுவதாகவும், சூயஸ் திட்டத்தை ரத்து செய்வது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு எனவும் இதுகுறித்து முதல்வர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருப்பு இருந்த தடுப்பூசி அனைத்தும் போட்டு முடித்தாகிவிட்டது எனவும், தற்போது தடுப்பூசிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அமைச்சர், தடுப்பூசி வந்தவுடன் கிராமங்கள் தோறும் ஊசி போடுவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், நகராட்சிகளில் அதிக விலை கொடுத்து கடந்த காலங்களில் பொருட்கள் வாங்கி இருந்தால், அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவே தற்போது அரசின் முழு கவனம் இருந்து வருவதாகவும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.
பேட்டியின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் ரூ10 ஆயிரம் ஊதியத்தில், 100 செவிலியர்களுக்களுக்கு பணிநியமன ஆணையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.