கோவை: கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பன்மடங்கு வசூல் செய்யும் சில தனியார் மருத்துவமனைகள் மீது புகாரின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும், கோவையில் சில தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொரோனா வசூல் வேட்டை தொடர்ந்து வருவது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
கோவை: கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பன்மடங்கு வசூல் செய்யும் சில தனியார் மருத்துவமனைகள் மீது புகாரின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும், கோவையில் சில தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொரோனா வசூல் வேட்டை தொடர்ந்து வருவது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
நாள்தோறும் பெருகி வரும் இது போன்ற சம்பவங்களால் இந்த பேரிடர் காலத்தில் மக்கள் சொல்லில்லடங்கா துன்பத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது என்று கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தவரின் மகன் ஒருவர், ஒரு தனியார் மருத்துவமனை தங்களிடம் ரூ.16 லட்சம் வசூல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ஷாஜகான் கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு 21 நாள் சிகிச்சையில் இருந்த ஷாஜகான் மே 20ம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த ஷாஜகன் மகன் நதீமிடம் கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், 21 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஷாஜகான் உயிரிழந்துவிடவே, மருத்துவமனை நிர்வாகம் ரூ.11.50 லட்சம் கட்டணமாக கேட்பதாக நதீம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து நதீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது தந்தையை கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதித்து ரூ.1 லட்சம் முன்பணமாக செலுத்தினோம். அடுத்த சில நாட்களில் எனக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது.
எனவே, மீண்டும் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தினேன். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 21 நாட்களில் என் தந்தை இறந்துவிட்டார். அவரது பில் தொகை மட்டும் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் என்று கூறிய மருத்துவமனை, அதனை நாங்கள் செய்திருந்த காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்றுக்கொள்வதாக கூறினர்.
பின்னர், கூடுதல் பில் தொகையை காப்பீட்டு நிறுவனம் செலுத்தவில்லை, அதனால் எனது தந்தையின் உடலை எங்களிடம் கொடுக்காமல் அலைக்கழித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் தந்தை உடல் எங்களுக்கு கிடைத்தது. இது தவிர எனக்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பில் தொகை கேட்டுள்ளனர். இதுகுறித்தும், ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். நோயாளிகளிடம் கொரோனா சிகிச்சை என்ற பெயரில் லட்சங்களை வசூல் செய்யும் இந்த தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நதீம் கூறினார்.
ஏற்கனவே, கோவையில் தனியார் மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் நேரத்தில், மாவட்ட நிர்வாகம் மவுனம் காப்பது, ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரை வேதனையடையச் செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், நேற்றையதினம் இதேபோன்று சுங்கத்தில் உள்ள மனு என்ற தனியார் மருத்துவமனையிலும், மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டுக்கு பிறகே கொரோனாவால் இறந்தவரின் உடல் கொடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.