ஈரோடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியின் அடிப்படையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் நலன் காக்க, ஆகஸ்ட் 15ம் தேதி வழக்கம்போல் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்த அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடைமடைப் பகுதியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியின் அடிப்படையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் நலன் காக்க, ஆகஸ்ட் 15ம் தேதி வழக்கம்போல் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்த அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடைமடைப் பகுதியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் நடைபெற்றது.
‘‘தேர்தல் பரப்புரையின் போது, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் நலன் காக்கத் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரு தரப்பு விவசாயிகள் கூட்டத்தில் கடைமடை பாசனப் பகுதிகளுக்கும் நீர்ப் பாசன வசதி பெறும் வகையிலும், எந்த விவசாயிகளும் பாதிக்காத வண்ணம் கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதி வழக்கம்போல் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் அறிவித்த அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடைமடைப் பகுதியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் நடைபெற்றது.
கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு கான்கிரீட் திட்டம் என்ற பெயரில் 2013-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் 1230 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் கான்கிரீட் திட்டம் என்பதால் கீழ்பவானி பாசனத்தில் கசிவு நீராதாரம் என்பதே இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும் என விவசாயிகள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் பாசனப் பகுதிகள் முழுவதும் மாநாடு, கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற பல்வேறு வடிவப் போராட்டங்கள் நடைபெற்றன.
கீழ்பவானி பாசனம் என்பது சுமார் 2,07,000 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டு 1,03,500 ஏக்கர் முதல் பகுதி எனவும் மீதமுள்ள 1,03,500 ஏக்கர் இரண்டாம் பகுதி எனவும் இரு போகங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கொரு முறைதான் நன்செய் பாசனம் பெறுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால் அனைத்துமே மண் வாய்க்கால்கள். எனவே, இரண்டாம் பகுதி பாசன வசதி பெறும்போது நீர் கசிவு ஏற்பட்டுக் கசிவு நீர் மூலமாகக் குளம், குட்டை, கிணறுகளும், குடிநீர் பயன்பாட்டு ஆதாரங்களும் நிரம்பி பெரிதும் பயன்படும்.
அதுபோலவே, முதல் பகுதி பாசன வசதி பெறும்போது இரண்டாம் பகுதி கசிவு நீராதாரத்தின் மூலம் பாசனம் பெறும். மேலும் கசிவு நீர் மூலமாக ஏற்கெனவே ஆயக்கட்டு நிலங்களும் மற்றும் சில பகுதி பாசனங்களும் பயன்பெறும் வகையில் 36 கசிவு நீர் குட்டைகள் உருவாக்கப்பட்டு, சுமார் 40,000 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றனர். தவிர, 30க்கும் மேற்பட்ட பள்ளங்கள், ஓடைகள் மூலம் சுமார் 50,000 ஏக்கர் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர்ப் பாசன வசதி பெறுகிறார்கள். கான்கிரீட் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் இரு கரைகளிலும் லைனிங் செய்யப்படுவதால் கசிவு நீர் ஏற்படாமல் கசிவு நீர்ப் பாசனம் என்பதே இல்லாமல் ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். வாய்க்காலின் இரு கரைகளிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான ஆபத்தும் ஏற்படும்.
இதனை அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம் விவசாய இயக்கங்களின் சார்பாக எடுத்துச் செல்லப்பட்டு அவரும் விவசாயிகளின் கருத்துகளை ஏற்று இத்திட்டத்தை அடியோடு கைவிட்டார். ஆனால், 2020ஆம் ஆண்டு எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 730 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் அறிவித்தது. முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டம் ஈரோடு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளரின்(பொதுப்பணித்துறை) தவறான வழி காட்டுதலின் பேரில் அறிவிக்கப்பட்டது.
தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 65 ஆண்டுகளாக இதுவரை கீழ்பவானி பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமலும் மண்கரைகள் பலப்படுத்தப்படாமலும் இருப்பதைப் பொதுப் பணித்துறை கவனிக்கத் தவறியுள்ளது. தற்போதைய நிலையில் வாய்க்காலை முறையாகத் தூர்வாரி வாய்க்காலின் இரு கரைகளிலும் தொடர்ச்சியாக மண்ணைக் கொட்டி பலப்படுத்திச் சீர்படுத்த வேண்டும். முறையாக நீர் நிர்வாகம் செய்தாலே கடைமடை விவசாயிகளுக்கும் எளிதில் விவசாய பாசன வசதி பெறும். மேலும், பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் தேவையற்ற முறையில் கான்கிரீட் லைனிங் செய்யாமல் இருந்தால் முழு பாசன வசதி கடைக்கோடி விவசாயிகளுக்கும் கிடைக்கும்'' எனக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.