கோவை: கோவை காட்மா சங்கத்தினர் GST குறித்த குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை காட்மா சங்கத்தினர் GST குறித்த குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கமான காட்மாவின் தலைவர் C.சிவக்குமார் சங்கத்தின் சார்பாக, GST குறித்த குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை, தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் மாண்புமிகு பழனிவேல் தியாகராஜனுக்கு அனுப்பியுள்ளார். அக்கோரிக்கைகள் அடங்கிய மனுவில்,
“கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. எங்களது காட்மா சங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எண்ணிக்கையில் அதிகமான தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும், தொழில் முனைவோர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், தொழில் முனைவோர்களின் GST குறித்த வேண்டுகோள்கள் இங்கே கோரிக்கைகளாக தங்களிடம் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள GST வரியில், லேபர் சார்ஜ் அடிப்படையில், ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான GST வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும்.
தாமதமாக GST வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால், அவை நீக்கப்பட வேண்டும்.
தற்போது GST கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளர் பிரதி மாதம் 11-ம் தேதிக்குள் தங்களது GST கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், பொருளை வாங்கிய வாடிக்கையாளர் அவர் செலுத்திய GST வரியை உள்ளீட்டு வரியாக (ITC) எடுக்க இயலாது என்ற GST விதிமுறை வாபஸ் பெறப்பட வேண்டும்.
GST அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, கடந்த பிப்ரவரி 2021 வரை இந்தியா முழுவதும் GST ரிட்டர்ன் தாக்கல் செய்யப்படாததால் 8,20,481 GST கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், தொழில் மந்த நிலையினாலும், வணிக வரித்துறையினரால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தினாலும் GST கணக்கை சரண்டர் செய்தவர்கள் 7,34,405. இதன்படி ஏறக்குறைய 16 லட்சம் தொழிற்கூடங்கள் நாடு முழுவதும் GSTயினால் மூடப்பட்டுள்ளன.
தொழில் முனைவோர்கள் GST வரி செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால், நடைமுறையில், ஒரு குறுந்தொழில் முனைவோர் தாம் செய்யும் வேலைக்கு பில் போடும் பொழுது அதற்கு உண்டான பேமெண்டை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதற்க்கு 90 முதல் 160 நாட்கள் வரை கால தாமதம் ஆகிறது. ஆனால், அந்த பில்களுக்கான GST வரியை பிரதி மாதம் 20-ஆம் தேதிக்குள் தொழில் முனைவோர் செலுத்த வேண்டியிருக்கிறது.
வாடிக்கையாளரிடம் இருந்து பேமெண்ட் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனாலும் கூட தொழில் முனைவோர் அதற்கான GST வரியை செலுத்திவிட வேண்டி இருப்பதால், அதற்காக கந்துவட்டி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க வேண்டியுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட கடன்களுக்கான தவணைகள் மற்றும் வட்டியையும் கூடுதலாக ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டியிருப்பதால் தொழில் முனைவோர் தங்களது தொழிலிற்கு செய்ய வேண்டிய முதலீடு வெகுவாக குறைந்து விடுகிறது. எனவே, இதுவரை GST வரி செலுத்தாமல் இருந்து, தற்போது GST வரி செலுத்த தயாராக இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு எவ்விதமான வட்டியோ அல்லது அபராதமோ இன்றி, அவர்களது GST நிலுவை தொகையை மட்டும் செலுத்திக் கொண்டு தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை அனுமதித்தால் இந்தியா முழுவதும் 16 லட்சம் தொழில் முனைவோர் மீண்டும் தங்களது தொழிலை தொடர்வதற்கு பேருதவியாக இருக்கும். இதன் மூலம் நாட்டின் வரி வருவாயும் அதிகமாகும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் குறைந்த பட்சம் 32 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சில பொருட்களை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கான மூலப்பொருட்களுக்கு GST வரி விகிதம் அதிகமாகவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் பொழுது அதற்கான GST வரி விகிதம் குறைவாகவும் உள்ளது. இதுவும் தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த நெருக்கடியை அளிப்பதாக உள்ளது.
அடுத்ததாக GST ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலோ அல்லது GST செலுத்தாமலோ இருக்கும் ஒரு தொழில் முனைவோர், தங்களது GST கணக்கு முடக்கபட்ட 30 நாட்களுக்குள் முழு GST நிலுவை தொகையை 18% வட்டியுடன் செலுத்தாவிடில், தீர்ப்பாயத்தில் முழு வரி நிலுவையை, உள்ளீட்டு வரியை (ITC) கழிக்காமல் முழுவதுமாக 18% வட்டி மற்றும் அலுவலர்கள் நிர்ணயிக்கும் அபராதம் ஆகியவற்றையும் சேர்த்து முழுவதும் செலுத்திய ஆவணத்துடன் மேல் முறையீடு செய்து, தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பின்புதான் தங்கள் GST கணக்கை புதுப்பித்து, தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய முடிகிறது. இவ்வாறு செய்வதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் வரை ஆகிவிடுகிறது. இது தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த நெருக்கடியை உண்டாக்குவதாக இருக்கிறது.
எனவே, இதுபோன்ற GSTயில் உள்ள தொழில்களை பாதிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் குறுந்தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெரும் என்பதை மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் ஆகிய தாங்கள், பரிசீலித்து, மத்திய அரசு மற்றும் GST கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று தொழிலையும், தொழில் முனைவோர்களையும் காப்பாற்றி உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.