திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு வழி முறைகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இத்தகவலைத் தெரிவித்தார்.
திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு வழி முறைகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இத்தகவலைத் தெரிவித்தார்.
கொரோனா நோய்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நோய் வந்தபின் மருத்துவம் பார்ப்பது ஒருபுறம் இருப்பினும் நோய் தடுப்பு வழிமுறைகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அதுவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்(TEA) தலைவர், ராஜா எம்.சண்முகம் கூறினார்.
‘SimpliCity' நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா நோய்த்தொற்று பரவல் அனைத்து துறையிலும் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள் உறவினர்கள் என ஒருவருக்கொருவர் நேரில் பேசிக் கொள்வதற்குக் கூட அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலையைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக தொழில் நிறுவனங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படாமல் நோய்த் தடுப்புக்கு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி விதிமுறைகளை சீரான முறையில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி வந்தன.
துரதிஸ்டவசமாக மக்களின் அலட்சியம் காரணமாக நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நோய் வந்த பின் மருத்துவம் பார்ப்பது ஒருபுறம் இருந்தாலும் நோய்த் தடுப்பு வழிமுறைகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அதுவே, இந்த நோய்த் தொற்று பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
இதுகுறித்த ஒரு விழிப்புணர்வு காணொளியை நான் வெளியிட்டுள்ளேன். அதில், சுடு தண்ணீரில் உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து காலை மற்றும் இரவு வாய் கொப்பளித்தல் அவசியத்தை கூறியுள்ளேன். தொண்டைப் பகுதியில் உப்பின் படிமானம் இருந்தால் வைரஸ் கிருமி உள்ளே நுழையும் பொழுதே மடிந்துவிடும். வாய் கொப்பளித்தல் என்பது மிகவும் எளிய முறை. அனைத்து நிறுவனங்களிலும் நுழைவாயிலில் இதை செயல்படுத்தத் தொடங்கி உள்ளோம். இதன்படி தொழில் நிறுவனத்திற்கு உள்ளே வருபவர்கள், மஞ்சள் மற்றும் உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்த பின் உள்ளே வரவேண்டும். பணியை முடித்து வெளியே செல்லும் பொழுது மீண்டும் வாய் கொப்பளித்து விட்டு செல்ல வேண்டும். இதுபோன்ற செயல் முறையை பின்பற்றுவதால் ஒருவர் தன்னிடம் இருந்து மற்றவருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மூக்கின் உட்புற பகுதியில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால் வைரஸ் கிருமி மூக்கின் வழியே செல்வதைத் தடுக்க முடியும். இவ்விரண்டு செயல்முறையும் மிகவும் எளிதாக அனைவராலும் பின்பற்றக்கூடிய வழிமுறைகளாகும்.
இவை தவிர, அரசு வெளியிட்டுள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு சகஜ நிலைமைக்கு திரும்பலாம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும். நோய்த் தடுப்பு வழி முறைகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு தனி மனிதரிடம் இருந்தும் தொடங்க வேண்டும்'' என்று கூறினார்.