கோவை: கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கு தொடர்பாக கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களின் தொழில் முனைவோர்கள் தமிழக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கு தொடர்பாக கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களின் தொழில் முனைவோர்கள் தமிழக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கோவை மற்றும் திருப்பூர் தொழில் முனைவோர்களின் காட்மா சங்கத்தினர் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையில்,
‘‘கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. எங்களது காட்மா சங்கத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எண்ணிக்கையில் அதிகமான தொழில் முனைவோர்கள்
உறுப்பினர்களாக இருப்பதாலும், தொழில் முனைவோர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், தொழில் முனைவோர்களின் வேண்டுகோள்கள் இங்கே கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது.
முதலில், இன்று 22.05.21 தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வார கால தளர்வு இல்லா கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவுக்கு எங்களது காட்மா சங்கத்தின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளாக மத்திய அரசின் சார்பில், கொரோனா பெரும் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்திற்கு, தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி வழங்கி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, காலம் தாழ்த்தாமல் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி, பெருந்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவ வேண்டும்.
இனி வரும் 6 மாதங்களுக்கு GST தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும், மேலும் அந்த 6 மாத காலங்களுக்கு எவ்விதமான வட்டியோ, அபராதமோ வசூலிக்கக்கூடாது. இதுவரை GST செலுத்த இயலாத தொழில் முனைவோர்கள். தாங்கள் செலுத்த வேண்டிய GST தொகையை மட்டும் எவ்விதமான வட்டி மற்றும் அபராதம் இன்றி செலுத்திக் கொள்ள அனுமதித்து உதவ வேண்டும்.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களில் இதுவரை வங்கிகளில் எவ்விதக் கடனும் பெறாத தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளால் எவ்வித உதவியும் செய்யப்படவில்லை. அதுபோன்ற தொழில் முனைவோர்களுக்கு அவர்களது நடப்புக் கணக்கு பரிவர்த்தனையின் அடிப்படையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் வட்டியில்லா கடனுதவி அளிக்கப்பட வேண்டும்.
செயல்படா கணக்குகளுக்கு (NPA) கடந்த கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவின் போது அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்க பெறவில்லை. மேலும் கடந்த முறை, ஏற்கெனவே கடன் பெற்றவர்களுக்கு மட்டும், 20% கொரோனா பேரிடர் கால கடனாக வங்கிகளால் வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் கடன் தவணைகளை 60 நாட்களுக்குப் பிறகு செலுத்திய தொழில் முனைவோர்களுக்கு SMA 2 என்ற விதியினை காரணம் காட்டி வங்கிகளால் கடன் வழங்காமல் தட்டிக்கழிக்கப்பட்டது. எனவே, இவற்றை கவனத்திற்கொண்டு, தற்போதும் கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் முனைவோர் அனைவருக்கும் அவர்களது வங்கிப் பரிவர்த்தனையின் அடிப்படையில். வட்டியில்லா குறுகிய கால கடன்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் தொழில் முனைவோர் தங்கள் வங்கிக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு ஒரு வருடம் கால நீட்டிப்பு செய்து கொடுக்கப்படவேண்டும். அந்த ஒரு வருட காலத்திற்கு அவர்களது கடன் தவணைகளுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
தமிழக அரசின் சார்பில், இப்பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வங்கிகளின் மூலமாக தொழில் முனைவோர் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், வட்டி இல்லா கடன்கள் வழங்கப்பட்டு, தொழில் முனைவோர் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு அவர்களது கடன் தவணைகளை செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மின் கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் வீட்டு வரி போன்றவற்றை செலுத்துவதற்கு 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உள்ளாகவே அடுத்த கொரோனா தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொழில் முனைவோர்களது வாழ்வாதாரத்தை மேலும் சிதைக்கக் கூடும் என்பதால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, தொழில் மற்றும் தொழில் முனைவோர்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை காட்மா சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.'' என்று தெரிவித்துள்ளனர்.