கோவை: கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கொரானா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கொரானா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத்துவமனையான இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது.
அப்போது, நவீன தாதியலின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, செவிலியர்களிடையே மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் பேசுகையில், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட மருத்துவமனை முதல்வர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி அழுது கண்ணீர் விட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.