திருப்பூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவிநாசி, அனுப்பர் பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருப்பூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவிநாசி, அனுப்பர் பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று திருப்பூர் மாவட்டத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல் நிகழ்வாக அவிநாசி பேருந்து நிலையம் வந்த அவர், வரவேற்பை பெற்றுக்கொண்டு அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.
அப்போது, டெல்லியில் உள்ள அரசு ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கின்ற வழிகளில் செல்கிறது என்றும், அங்கிருக்கிற பிரதமர் மோடி தமிழக அரசை கட்டுப்படுத்தியது போல, தமிழக மக்களை கட்டுப்படுத்தலாம் என நினைப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கலாம் என நினைப்பதாகவும், தமிழக மக்கள் நினைத்ததை தான் செய்வார்கள். யாரும் வாங்க முடியாது என்றார். விவசாயத்தையும், சிறு குறு தொழில்களையும் 5 அல்லது 6 முதலாளிகளிடம் ஒப்படைத்துவிடலாம் என நினைக்கிறார் என்று கூறிய அவர், என் குடும்பத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இடையே அரசியலை கடந்து ஒரு உணர்வூப்பூர்வமாகவுன் அன்பின் அடையாளமாகவும் இருக்கிறது என்று பேசினார். இறுதியாக, உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஓர் அரசை கொண்டுவர முயல்கிறோம் என்று கூறி விடைபெற்றார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவர், அனுப்பர்பாளையம் வருவதற்குள் திடீரென காரை நிறுத்தி அருகில் இருந்த கடைக்குள் சென்று கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் அருந்தினார். அடுத்த இடமாக அனுப்பர்பாளையம் பகுதிக்கு வந்து மக்களிடையே பேசும் போது, இந்தியாவின் நிலைமையை அனைவரும் அறிவோம். பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்து வருகிறது என்றதுடன், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனாவை கையாண்ட விதத்தால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மதம், கலாச்சாரம் நமக்கு கற்பித்ததை அவர்கள் உணரவில்லை. நம் கலாச்சாரம் அடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது. இது தான் தமிழகத்தின் கலாச்சாரம், அடையாளம் என்று கூறினார்.
மேலும், என்னுடைய மன்கிபாத்தை சொல்ல நான் இங்கு வரவில்லை என்றும் உங்களுடைய மன்கிபாத் (குறைகளை) கேட்கவே இங்கு வந்துள்ளேன் என்று கூறி அங்கு இருந்து கிளம்பினார்.
பின்னர், ரயில் நிலையம் பகுதியில் உள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி, குமரனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
