கோவை: பிரதமர் மோடி விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார் எனவும் விவசாயிகளை தொழில் அதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார் என்று கோவையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கோவை: பிரதமர் மோடி விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார் எனவும் விவசாயிகளை தொழில் அதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார் என்று கோவையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டனர்.
அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று முதல் 3 நாட்கள் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் ராகுல் காந்தி கோவைக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு, செயல்தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், மயூரா ஜெயக்குமார், கோவை மாவட்ட தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கோவை அவினாசி சாலையில் சித்ரா சந்திப்பில் ராகுல்காந்தி பேசியதாவது:

தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி. தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. தற்போது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்டு வர சிலர் போராடி வருகின்றனர். அது என்னவென்றால் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஒரே விதமான செயல்பாடுகளை கொண்டு வர போராடி வருகிறார்கள். அவற்றை நாம் எதிர்த்துப் போராடி வருகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியையோ கலாச்சாரத்தையோ ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. தமிழ் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறையை அவர் இரண்டாவது பட்சமாக கருதுகிறார். நாட்டில் தமிழக மக்களை இரண்டாம் தரக்குடி மக்களாக கருதுகிறார். ஆனால், இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறை இருக்கிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஆனால் நாட்டின் அமைப்பு முறையில் தமிழ், இந்தி, பெங்காலி போன்ற அனைத்து விதமான மொழிகளும் உள்ளன. அனைத்து மொழிகளுக்கும் சமமான உரிமை இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். நமக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான். நாட்டின் பெரிய தொழில் அதிபர்களாக உள்ள தனது சில நண்பர்களின் வாழ்க்கைக்காக அவர் பாடுபடுகிறார்.
பிரதமர் மோடி இந்திய மக்களுடைய, தமிழக மக்களுடைய எல்லாவற்றையும் விற்க தயாராகி வருகிறார். விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகளை மாபெரும் தொழில் அதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார். அதனால் தான் நாங்கள் பா.ஜ.கவை எதிர்கிறோம் என்றார்.

நாங்கள் விவசாயிகள் பக்கம் நிற்கிறோம். இந்தியாவில் தமிழ்நாடுதான் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன் உதாரணமாக இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். இந்தியாவுக்கு சிறந்த தொழில் அமைப்புகள் தேவைப்படுகின்றன. வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. தமிழகம் அதற்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் தொழில்துறையில் சிறந்து விளங்கி உள்ளது. இந்தியா தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.

தமிழக இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமாக வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருக்கின்றனர். அதே போல், தமிழக விவசாயிகளும் சிரமம் பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் தான் தமிழக மக்கள் புதிய வாழ்க்கை முறையும், புதிய அரசாங்கத்தையும் விரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
அதற்காக தான் நாம் புதிய அரசை வழங்குவதற்காக உங்களுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் விரும்பக்கூடிய அரசாங்கத்தை தருவதற்காக தான் நான் இங்கே வந்து கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்காக உதவி செய்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிறு, குறு தொழில் செய்பவர்களின் சிரமத்தைப் புரிந்து கொள்வதற்காக நான் இங்கே வந்துள்ளேன். சிறு,குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்கள் அவர்களின் பிரச்சனை என்ன எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்.
தமிழகம் மக்களுடன் அரசியல் உறவு மட்டுமல்ல குடும்ப உறவு ரத்த உறவும் இருக்கிறது. அதற்காக தான் உங்களுக்காக தியாகம் செய்வதற்காக நான் வந்திருக்கிறேன். நான் எந்தவித சுயநலத்திற்காகவும் வரவில்லை. நான் வந்தது உங்களோடு உறவாடுவதற்காக, உங்களை முன்னேற்றுவதற்காக. சுயலாபம் எனக்கு கிடையாது. எனக்கும் உங்களுக்கும் உள்ள உறவு நேர்மையான நம்பிக்கையான உறவு, இந்த உறவு தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.