கோவை: கோவையில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: கோவையில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, புறநகர், வட்டம், ஒன்றியம், பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் வரவேற்பளித்தனர்.
பின்னர், கொடிசியாவில் தொழில்துறையினருடன் கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் பேசியதாவது:

ஒரு அரசாங்கத்துக்கு தொழிலும், வேளாண்மையும் இரண்டு கண்களாகும். நாடு வளர வேண்டும் என்றால் தொழில் வளம், வேளாண்மை சிறக்க வேண்டும். இந்த இரண்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி, வளமான தமிழகம் உருவாக்க எங்கள் அரசு அடித்தளம் அமைத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். நாட்டிலேயே அதிகளவு உணவு தானிய உற்பத்தி செய்து, தொடர்ந்து தேசிய விருதை எங்களது அரசு பெற்று வருகிறது.
டெல்டா பகுதியில், நெற்பயிர்களுக்கு உரிய காலத்தில், கடைமடை வரை, விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் தடையின்றி கொடுத்ததால், ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் மெட்ரிக் டன் அரசு நெல் கொள்முதல் செய்த நிலை மாறி, நடப்பாண்டு 32.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொழிற்துறை வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். அவரது வழியில் செயல்படும் இந்த அரசு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில், தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, 304 தொழில் நிறுவனங்களை கொண்டு வந்தது. கொரோனா தொற்று காலத்தில் கூட, நாட்டிலேயே சுமார் ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 74 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது இந்த அரசு. தற்போது நாட்டிலேயே, தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம். தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.
அகில இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் சேலம் நகர காவல்நிலையம் முதலிடம் பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லாவிட்டால், அங்கே தொழில் முழுமையாக செயல்பட முடியாது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் தொழில் சிறப்பாக நடக்கும். தற்போது தடையில்லாத மின்சாரத்தை இந்த அரசு வழங்கி வருகிறது. மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. கோவை, திருப்பூருக்கு தடையில்லாத மின்சாரத்தை அரசு வழங்குகிறது.
கோவை மாநகர் வளர்ந்து வருகிறது. இங்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாடுபட்டு வருகிறார். மற்ற அமைச்சர்களுக்கு முன்மாதிரியாக அமைச்சர் வேலுமணி உள்ளார். மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையெடுப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தொழில்துறையினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும். தொழில்துறையினர் எவ்வித இடையூறும் இன்றி தொழில்புரிய அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.