கோவை: கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில், 10.10 கி.மீ நீளத்தில் தமிழகத்திலேயே மிகவும் நீண்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, பீளமேடு பகுதிகளில் இப்பாலப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில், 10.10 கி.மீ நீளத்தில் தமிழகத்திலேயே மிகவும் நீண்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, பீளமேடு பகுதிகளில் இப்பாலப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம்
கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவினாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன.
30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகனப் பெருக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பாலம்
சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும், இச்சாலை இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கி.மீ நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இனிவரும் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகனப் பெருக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இப்பாலம் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது, என கூறப்படுகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘இந்த உயர்மட்ட மேம்பாலம் மொத்தம் 10.10 கிமீ நீளத்திற்கு அமையவுள்ளது. 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப் பாதையாக, நான்கு இடங்களில் ஏறு தளமும், நான்கு இடங்களில் இறங்கு தளமும் 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமையவுள்ளது. இப்பணியில், 10.50 மீட்டர் அகலத்தில் இரு புறமும் சேவைச் சாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமையவுள்ளது.
கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடைபாதை அமையவுள்ளது. மேலும், மூன்று இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடைபெறவுள்ளது.
இந்த பாலம் கட்டி முடிக்கப்படும் போது தமிழகத்தின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெறுவதுடன் கோவையின் புதிய அடையாளமாகவும் இருக்கும், என்றார்.