கோவை: இலவச பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக கோர்ட் உத்தரவுகளை மீறி அ.தி.மு.க. கட்சியினர் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று தலைமைச்செயலாளரிடம் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.
கோவை: இலவச பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக கோர்ட் உத்தரவுகளை மீறி அ.தி.மு.க. கட்சியினர் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று தலைமைச்செயலாளரிடம் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோர்ட்டு நேரடியாக பிறப்பிக்கும் உத்தரவுகளை மறைமுகமாக சென்று சேர்க்கக்கூடாது. கோர்ட்டில் அளிக்கும் உத்தரவுகளை மீறி செயல்படுவது கோர்ட் அவமதிப்பு குற்றமாகும். உத்தரவுகளை எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுத்துவது கடமையாகும். சட்டரீதியான இந்த மூன்று அம்சங்களும் இலவச பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் 2,500 தொகை வழங்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஆளும் கட்சியின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வழங்குவதுபோல் காட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சில உத்தரவுகளை ஐகோர்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் 2,500 வழங்குவதற்காக அரசு வழங்கும் டோக்கன்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் ஏற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவதை ஏற்கக்கூடாது என கூறப்பட்டது. இது தொடர்பாக அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதில் அரசினால் வழங்கப்படும் டோக்கன்களில் எந்த ஒரு அரசியல் தலைவர்களின் படங்களையும் அச்சிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் மேலிடத்து உத்தரவுப்படி கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் அருகிலும், அதையொட்டிய பகுதிகளிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ.க்களின் படம் பொறிக்கப்பட்ட பேனர்களை வைத்துள்ளனர். இது ஐகோர்ட்டின் உத்தரவை அப்பட்டமாக மீறும் செயலாகும். எனவே இதுபோன்ற பேனர்களை உடனடியாக அகற்றவும், பொங்கல் பரிசுத் திட்டத்தில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகள் கடைப்பிடிக்கபடுகிறதா என்பதை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.