கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ போலீசார் மேலும் 3 பேரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், அ.தி.மு.க பிரமுகர் உட்பட நள்ளிரவு 3 பேரையும் சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ போலீசார் மேலும் 3 பேரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், அ.தி.மு.க பிரமுகர் உட்பட நள்ளிரவு 3 பேரையும் சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:- பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை நேற்று விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்குவதால் 3 பேரிடமும் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் தருவதாக அமையும் என்று கூறப்படுகிறது.
விசாரணை முடிவில் சிபிஐ மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு -- பொள்ளாச்சி வடுகபாளையம் கிருஷ்ணசாமி செட்டியார் மகன் அருளானந்தம் (34), இவர் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளார். பொள்ளாச்சி வடுகபாளையம் பழனிச்சாமி என்பவர் மகன் பாபு என்கிற பைக் பாபு (27), பொள்ளாச்சி ஆட்சி பட்டி, A.சங்கம்பாளையம், கற்பக விநாயகர் நகர், தங்கராஜ் மகன் ஹேரேன்பால் (29), இந்த மூன்று பேரையும் நள்ளிரவு விசாரணையின் முடிவில் சிபிஐ கைது செய்தனர்.
இதன் பின்னணியில், பல உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் மூன்று பேரும் கைதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததின் அடிப்படையில் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: அவர்கள் மூவரும் இன்னும் சற்று நேரத்தில் கோவை மகிளா கோர்ட் நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்த படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.