கோவை: மின்வேலியில் சிக்கி யானை பலியானதையடுத்து, முறைகேடாக மின்வேலி அமைப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை: மின்வேலியில் சிக்கி யானை பலியானதையடுத்து, முறைகேடாக மின்வேலி அமைப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட செம்மேடு அருகே குளத்து ஏரிப் பகுதியில் துரை என்பவரது வயலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தைத் திருடி மின்வேலியுடன் இணைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவரையும், நில உரிமையாளர் ரவி என்பவரையும் தேடி வருகின்றனர்.
உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சாடிவயல் யானைகள் முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த யானைக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `இந்தப் பகுதியில் யானைகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் யானைகளுக்கும் தீங்கும் ஏற்பட்டதில்லை. தற்போது மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்திருப்பது அபசகுனமாகக் கருதுகிறோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், `அண்மையில் சிறுமுகை வனப்பகுதியில் காட்டுப் பன்றி ஒன்று அங்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தற்போது செம்மேடு பகுதியில் துரை என்பவர் சட்டவிரோதமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி மின்வேலியில் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காலை முதல் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில், நெல் வயலைச் சுற்றிலும் முறைகேடாக மின்வேலி அமைக்கப்பட்டது கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர் ரவி மற்றும் தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள துரை ஆகியோர் மீது வன உயிரினச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யானை உயிரிழந்ததையடுத்து உரிமையாளரும், குத்தகைதாரர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம். யானை ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிக்கும்பட்சத்தில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொள்வார்கள். அப்படி இல்லாமல் இதுபோன்று சட்ட விரோதமாக மின் வேலி அமைக்கக்கூடாது. இதுபோன்று யாராவது முறைகேடாக மின் வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீது வன உயிரினச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.