கோவை: என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தி.மு.க.வினருக்கு சவால் விடுத்துள்ளார்.
கோவை: என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தி.மு.க.வினருக்கு சவால் விடுத்துள்ளார்.
கோவை ரத்தினபுரி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று காலத்தில் முதலமைச்சர் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் அறிவித்துள்ளார். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். 2,500 ரூபாய் பொங்கல் பரிசை மு.க.ஸ்டாலின் எப்படி தடுக்க நினைத்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
ஏமாற்றுவதில் மு.க.ஸ்டாலின் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதில் மு.க.ஸ்டாலின் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர். தொண்டாமுத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் கிராம சபைக் கூட்டத்தை விதிகளுக்கு உட்பட்டு நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கு, தொண்டாமுத்தூரில் 3-ஆம் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கூட்டத்தில் நடிகை விந்தியா மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பதிலடி தருவார்கள்.
ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயார்
தி.மு.க.வினர் என் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயாராக உள்ளேன். அதேநேரத்தில், ஸ்டாலின் பதவி விலகி மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் வழங்குவாரா?
இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய மத்திய அரசுடன் இணைந்து ஆயுதங்களைக் கொடுத்து உதவியது தி.மு.க. தான். மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் திமுகதான். பதவி உள்ளவரை கோவை மக்களுக்கு வேண்டிய திட்டங்களை செய்து கொண்டே இருப்பேன். தி.மு.க.வினர் அவதூறு பரப்புவதையும் பொய் பிரச்சாரம் செய்வதையும் தவிர்த்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்.
இவ்வாறு கூறிய அவரிடம், முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அந்தக் கேள்வி தேவையற்றது எனவும் அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எனவும் தெரிவித்தார்.